கீழக்கரை 30.03.2015
கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வசிக்கும் ஜனாப்.அபுல் ஹுசைன் என்பவர் 'மாதிரி தோட்டம்' ஒன்றினை அமைத்து அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார். அதில் 25 க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளை வளர்த்து, பராமரித்து வருகிறார். தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் துபாய், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து விட்டு ஊர் திரும்பிய மூன்று மாதங்களுக்குள் இதனை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
22 கோல் அளவுள்ள இவருடைய இந்த மாதிரி தோட்டத்தில் வெண்டைக்காய், வெந்தயக் கீரை, தயிர் வலை செடி, குப்பை கீரை, குப்பை மேனி கீரை, பெரண்டை, திப்பிலி, மிதுக்கம் பழம், மருதாணி, மிதி பாகற்காய், பெரிய நெல்லி, பாதாம் கொட்டை, மினி பிளான்ட், வெற்றிலைக் கொடி, ரம்பளை, நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி, ப்ளம்ஸ் தக்காளி, குச்சி மிளகாய், குண்டு மிளகாய், முடக்கத்தான் கீரை, அரைக் கீரை, வெந்தயக் கீரை, கடுகுக் கீரை, மணத் தக்காளி கீரை, கொட்டை பாக்கு, எலுமிச்சை, செவ்வந்திப்பூ, மாப்பிள்ளை மல்லி, கீழ்வா நெல்லி, பெரியா நங்கை, மலை வேம்பு, திப்பிலி, பொன்னாங்கண்ணிக் கீரை, ஓமவல்லி என்று இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இது குறித்து இந்த மூலிகை தோட்டத்தினை தனி மனிதனாக உருவாக்கி, சிரத்தையுடன் பராமரித்து வரும் ஜனாப்.அபுல் ஹுசைன் அவர்களிடம் கேட்ட போது, "எனக்கு சிறு வயதிலிருந்தே தோட்டக் கலையில் அளப்பரிய ஆர்வம் இருந்து வருகிறது. ஆனால் பல காலம் வெளிநாடுகளிலேயே இருந்து விட்டதால் அதற்கான தருணம் அமையவில்லை. கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் வெளி நாட்டில் இருந்து நாடு திரும்பிய பின்னர் தான் இதனை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.
என் வீட்டின் எதிர் புறம் உள்ள எங்களுக்கு சொந்தமான தரிசு நிலத்தில் என்னுடைய பல்லாண்டு கால ஆர்வத்தை விதைத்தேன். அவைகள் இப்போது பசுமையாக காட்சி அளிக்கிறது. அனைத்து செடிகளுக்கும் நான் சொந்தமாக தயாரிக்கும் இயற்கை மண் புழு உரங்களையே பயன்படுத்துகிறேன். இங்கு இருக்கும் 25க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் பல்வேறு நோய்களுக்கும் அருமருந்தாக இருக்கிறது. மேலும் செடிகளை பூச்சிகளிடம் இருந்து காக்க இயற்கையாக நான் தயாரிக்கும் கிருமி நாசினியை பயன்படுத்தி வருகிறேன்
.
இதில் இருந்து கிடைக்கும் பலன்களை என் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் பயன் படுத்தி வருகின்றனர். எனக்கு இது மிகுந்த மன நிறைவைத் தருகிறது. எனவே நமது ஊர் மக்கள் தரிசாக வைத்திருக்கும் நிலங்களை நல்ல பலனுள்ள மரம், செடி, கொடிகளை நட்டு வளர்த்து என்னை போலவே பேரின்பம் அடைய வேண்டுமென அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கீழக்கரையை பொறுத்தமட்டில் கடும் நெருக்கமான வீடுகளிக்கிடையே வாழும் நம் மக்களுக்கு மரம் செடிகள் வளர்ப்பது என்பது கானல் நீராகவே இருக்கிறது. ஊருக்குள்ளும் பள்ளிவாசல்களின் மைய வாடிகளை தவிர வேறெங்கும் பசுமைகளை காண முடியாது. இப்படி இருக்கும் போது, தூய காற்றையும், பசுமையான சூழலையும், நல்ல தண்ணீரையும் தேடி கிழக்கில் பெரிய காடு பகுதியிலும், மேற்கில் 500 பிளாட்டு பகுதியிலும் குடியேறும் நம் மக்களுக்கு இது போன்ற முயற்சிகள் நல்ல ஊக்குவிப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தோட்டக் கலை ஆர்வம் உள்ளவர்கள் ஜனாப்.அபுல் ஹுசைன் அவர்களை
9952806012 என்கிற அவரது அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.